Saturday, May 29, 2010

வந்து விட்டேன் கிறுக்கல்களோடு..

நான் ஸ்கூல் படிக்கற வரைக்கும் கவிதைனா ஏதோ யாப்பு, அணி, பா இதெல்லாம் பயன்படுத்தி கோணார் உரை எழுதுபவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் எழுதும் ஒரு முறை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நமக்கு அப்பவெல்லாம் செய்யுள மனப்பாடம் பண்ணி அதை அப்படியே பரீட்சையில் எழுதறதே (அதுவும் அடி பிறழாமல்னு கொடுப்பாங்க பாருங்க) பிரசவ வேதனை (கொஞ்சம் ஒவரோ?பின்ன எக்ஸாம் ஹாலுக்கு முன்னாடி நின்னு படிச்சுட்டு உள்ள போய் அப்படியே அதை இறக்கி வைக்கணும்ல??). அதுவும் ஒரு தடவை செய்யுள சரியா எழுதிட்டு அதுக்குக் கீழ "ஆசிரிய விருத்தம்னு" தப்பா எழுதுனதுக்கு நீ இதுக்கு பதிலா "ஆசிரிய வருத்தம்னு" எழுதியிருந்தன்னா சரியா இருந்திருக்கும்டானு எங்க தமிழ் அய்யா பொண்ணுங்க முன்னாடி பாராட்டினது(!!) நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் காலேஜ் வந்த பிறகு கொஞ்ச நாளைக்கு "அதோ பாரு லைட்டு அண்ணாமலைதான் வெயிட்டு" அப்படின்னு சத்தம் போடுறதுதான் எங்களைப் பொறுத்த வரைக்கும் கவிதை. அதுக்கப்புறம் மில்கி வேயிலையும் நிரூலாஸ்லையும் நின்னுகிட்டு ஒரு டீய ஒன்றரை மணி நேரம் குடிச்சுட்டு அன்னைய பாடங்களைப் பத்தி டிஸ்கஸ் பண்ணியதில் (பாடத்த பத்தி டிஸ்கஸ் பண்ணவாடா நம்ம அங்க நின்னோம்னு இந்த இடத்தில் யாரும் கேட்கக்கூடாது) இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. அதுக்காக கடைசி வரைக்கும் அப்படியே இருந்தா எப்படி?? இதுக்கு நடுவுல புதுக்கவிதைன்னு ஒன்னு இருக்கு அதுக்கு மேற்படி சொன்ன சமாச்சாரங்கள் எதுவும் தேவையில்லைனு ஆனந்த விகடன்ல சுஜாதா சொல்லிட்டாரு. ஆனா நல்ல கவிதைங்கறது எப்படி இருக்கனும்னு வேற அவரோட கருத்த சொன்னாரு. அது என்னன்னா? ஒரு கவிதையை படிக்கும் போது அந்த காட்சி கண் முன்னாடி விரிந்து சில பல கேள்விகளை அல்லது உணர்வுகளை எழுப்பனுமாம் மொத்தத்தில் தொக்கி நிற்கனும்.(அல்லது அப்படிதான் நான் புரிந்து கொண்டேன்). அவர் கொடுத்த ஒரு உதாரணம்,
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து
மூடப்பட்டது..

இன்னொன்று
வரிகள் சரியாக ஞாபகம் இல்லை,

"
மழை பெய்ய ஆரம்பித்தது
புத்தகத்தை
மூடி விட்டு
அதை
ரசிக்க ஆரம்பித்தேன்"

என்று
வருமென நினைக்கிறேன். ஆனால் இந்த டைப்ல இப்ப நா முத்துக்குமார் நிறைய அப்புறம் எழுதுறாரு. அதைப்பற்றி தனி ஒரு பதிவே போடலாம். (சுஜாதா, முத்துக்குமார் சொன்னதுல்லாம் சரி நீ இப்ப என்ன சொல்ல வர??). நான் இதையெல்லாம் படிச்சு மோட்டிவேட் ஆகி கிறுக்கி இருப்பேன்னு நினைச்சுடாதீங்க. எல்லாரையும் மாதிரி மத்தவங்கள ( போ) இம்ப்ரெஸ் பண்ணதான் இதெல்லாம் ஆரம்பிச்சது அப்புறம் அது பிடிச்சு போச்சு. ஆனா என்ன இப்ப வரைக்கும் எதையும் ஒழுங்கா கிறுக்கினதா தெரியல.

அதனால மேற்படி நான் சொன்ன கவிதை இலக்கணங்களை எல்லாம் மறந்திட்டு அடுத்த வரிக்கு போக வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்ய மனம் வராதவர்கள் தயவு செய்து படிச்சுட்டு என்னைத் திட்டாதீர்கள். அதோட இதைப் படிச்சுட்டு இதெல்லாம் வைரமுத்து சொல்லிட்டாரு கண்ணதாசன் சொல்லிட்டாரு அப்படின்னு ஃபீல் பண்றவங்களை நான் மதிக்கிறேன். ஆனா என்னங்க பண்றது அதுக்காக நம்ம காதலுக்கும் சோகத்துக்கும் சந்தோஷத்துக்கும் அவங்கள எழுத சொல்ல முடியாது.. அவர்கள் தொடாத விஷயங்கள் என்று ஒன்று இருக்கிறதா என்றும் தெரியவில்லை.. ஆனால் அதுக்கு முன்னாடி வள்ளுவரும் கம்பரும் இன்ன பிற பெரிசுங்களும் நமக்கு எதையும் விட்டு வைக்காம எழுதிட்டு போய்டுச்சுங்க.. நம்ம மொழியோட வரலாறு அப்படி.. எத்தனை பேர் சொன்னாலும் காதலும் சோகமும் எல்லோருக்கும் ஒன்றுதான் அதை வெளிப்படுத்தும் தமிழும் ஒன்றுதான். எல்லோரும் காதலையும் சோகங்களையும் கடக்கும் போது அது அவர்களுக்கு புதிதுதான். அதனால சொல்லும் முறையைதான் பார்க்க வேண்டும்.. சொல்ல புதிதாக எதுவும் இல்லை, இங்கு மனிதர்களாகிய நாம் அனைவருமே காப்பி ரைட்டர்கள்தான், இயற்கைதான் உண்மையான கிரியேட்டர் என்பதும் அது நமக்கு அமைத்து கொடுக்கும் மைதானத்தில் அது வகுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதும் என் தாழ்மையான கருத்து. நாம் எப்போதெல்லாம் விதி மீறுகிறோமோ அப்போதெல்லாம் அது தன் இருத்தலை நமக்கு காண்பித்து விடுகிறது (வந்துட்டாருப்பா கொலம்பஸ்).
மீண்டும் நினைவூட்டுகிறேன் இது கவிதை இல்லை கிறுக்கல் (சாரி பார்த்திபன்).



முரண்பாடுகள்


உலக மக்களின் பசிப்பிணி போக்க
சாமிக்கு
நூற்றெட்டு குடம்
பாலபிஷேகம்.


குப்பைத் தொட்டியில் உணவுப் பொட்டலம்..
பொட்டலத்தாளில் செய்தி

"ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் பட்டினியால் சாவு"

இது இந்த போட்டோவைப் பார்த்த பாதிப்பில் எழுதியது.. இந்த புகைப்படமும் கிறுக்கலும் சொல்லும் கருத்தை படிப்பவர்களின் முடிவுக்கே விடுகிறேன்.

"ஆயுதம் வைத்திருந்ததாக ஒருவர் பொடாவில் கைது"
எங்கள் ஊர் சாமியும் அரிவாள் வைத்திருக்கிறார்
யார் கைது செய்வது??

"சாதிகள் இல்லையடி பாப்பா,
குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
என்று காலையில் பாரதியைக் கற்பித்த தமிழ் வாத்தியார்
மாலையில்
விண்ணப்பம் நிரப்ப கேட்கிறார்
"
நீ எந்த சாதி"??

"நாட்டின் பாதுகாப்பு குறித்து மக்கள்
அஞ்ச தேவையில்லை"-பிரதமரின் சுதந்திர தின உரை
குண்டு துளைக்காத மேடையிலிருந்து..

சுனாமி


கடலரக்கியே! ஆம், நேற்று வரை
கடல்
அன்னையே என்று அழைத்த அதே நாங்கள்தான்,
அன்னைக்கு அளிக்க மட்டுமே தெரியும் அழிக்க அல்ல.
அன்னையாக
இருந்த நீ ஏன் ஆழிப்பேரலை எனும்
அரக்கியாகிப்
போனாய்?
உனக்கு
ஒரு கேள்வி,
உலகில் சமத்துவம் தவழும் ஒரே இடம் நீ அறிவாயா?
கடவுளரின்
கருவறையா? அவையெல்லாம் தீவிரவாதத்தின்
கருவறைகளாகிப்
பல காலம் ஆகிறது, காசு கொடுத்தால்
கால்
மணி முன்னரே வந்து கடவுளே காட்சி தருவார் தெரியுமா?
அனைவருக்கும்
பொதுவான இடம் என்று
இடுகாட்டைக்
கூட காட்ட முடியாத இழி காலத்தில்,
சவமான
பின்னும் சாதியை விடாத எங்களுக்கு,
நீ
, நீ மட்டும் தான் அந்த அதிசயத்தை தினந்தோறும்
நிகழ்த்திக்
காட்டினாய்!
எத்தனை
மனிதர்கள்?? எத்தனை உணர்வுகள்??
எத்தனை கனவுகள்? எத்தனை காதல்கள்?
ஒரே சமயத்தில் அத்துனையும் பார்த்த மவுன சாட்சியாக நீ.
வாழ்க்கையைக் கொண்டாடுபவனும் திண்டாடுபவனும் ஒரே
நேரத்தில் சரணடையும் சரணாலயம் நீதான்.
யாருக்கும்
நீ பாரபட்சம் காட்டி அறிந்ததில்லை நாங்கள்.
உன்
கரையில் அமரும் போதெல்லாம் அலையாக நீ மீண்டும்
மீண்டும் வந்து உன் சமத்துவப் பாங்கை எங்களுக்குப் பகன்று
எங்களை
பகடி செய்வதாகக் கூட சில சமயங்களில் நினைத்ததுண்டு..
தான் கொடுத்த பாலுக்கு கணக்கு பார்த்ததில்லை எந்த தாயும்,
ஆனால்
ஒரு கந்து வட்டிக்காரி போல் நீ போட்ட உப்பை
வட்டியோடு
திரும்பப் பெற்றிருக்கிறாய் கண்ணீராக!!
" உப்பிட்டவரை உள்ளளவும் நினை"
என்று
நன்றிக்கடனுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் நாங்கள்.
ஆனால்
இப்பொழுது சொல்கிறோம்,
இனி
, உப்பிட்டிருந்தாலும் உன்னை
"
எள்ளளவும்" நினைக்கப் போவதில்லை..
ஆனால்
, தாயே அடித்தாலும் அவள் மடி தேடி ஓடும்
குழந்தை
போல உன் மடி தேடி நாங்கள் வரலாம்.
அப்போது
உன்னிடம் எதிர்பார்ப்பது அன்னையின் அன்பை.
இனி ஒரு முறை தாய்மை இழந்து எங்களைத் தவிக்க விடாதே!


ஹைக்கூ (மாதிரி ஆனா அது இல்ல)

காற்று அறைவதால்
அழுகிறதோ மேகம்?
மழை..



காதல்..















"
என்னை செல்லமாக எப்படி அழைப்பாய்?" - இது நீ.
செல்லத்தை
செல்லமாக எப்படி அழைப்பது என்று யோசித்தவாறே
"
அமெரிக்கா என்று அழைக்கலாமென்று இருக்கிறேன்" - இது நான்.
"ஏன்?" என்றாய் இதை சற்றும் எதிர்பார்க்காதவளாய்,
என்
"மேலிமை தேசத்துக்கும் கீழிமை தேசத்துக்கும் போர் மூட்டி"
விடுவதால்
என்றேன்.

அமெரிக்காவின் ஆயுதம் விற்கும் சூட்சுமம் பலரும் அறிந்ததுதான். இரு தேசங்களுக்கு இடையில் போர் மூட்டி விட்டு இருவரிடமும் விற்று விடுவது. இங்கு நான் சொல்ல விழைந்திருப்பது, நீ அருகிலிருக்கையில் இமைக்காமல் பார்க்கிறேன், இல்லாத போது தூக்கமின்றி தவிக்கிறேன்!!
புஷ் தனது பூனைக்கு இந்தியா என பெயர் சூட்டலாம் நான் என் செல்லத்துக்கு அமெரிக்கா என்று வைக்கக்கூடாதா?? ((ஓகே ஓகே கூல்டவுன்)
...............
வானிலை அறிக்கையில் காற்றின் ஈரப்பதம்
பற்றி
சொல்லும்போதெல்லாம் ஏனோ மனது
முன்னிரவில்
அலைபேசியில் நாம் பரிமாறிக்
கொண்ட
முத்தங்களின் எண்ணிக்கையை
நினைத்துப்
பார்க்கிறது.. அங்கு எப்படி?

...............

செய்தித் தாளில் தலைப்புச் செய்தி
"சந்திர
மண்டலத்துக்கு அனுப்பிய விண்கலம்
வீட்டு
மாடியில் இறங்கியதென்று"
உன்னை
யார் மொட்டை மாடியில் நிற்க சொன்னது??
...................
இதையே இப்போ எழுதியிருந்தா ஒரு வேளை இப்படி எழுதிருப்பேன்னு நினைக்கிறேன்.

சந்திராயன் வெற்றி பெற்றதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டாம்.
அதற்கு
மேலும் இருவரை அழைக்காமல் விட்டு விட்டார்கள்.
நீ
வெளியே வந்தால் சந்திரன் எதுவென்று விண்கலம்
தடுமாறி
விடும் என்று வீட்டினுள்ளேயே இருந்த உனக்கும்
அதை
முன்கூட்டியே ஊகித்து உன்னை இருக்கச் செய்த எனக்கும்.. அது விஞ்ஞானம், இது "மெய்"ஞானம்..

...............

"எனக்காக உயிரையும் தருவாயா?"
எனும்
ஒரே கேள்வியில் என்னை நோகடித்து விட்டாய்..
உன்னிடம்
உள்ளதை நான் எப்படித் தர முடியும்??
இதைக்
கூட அறியவில்லையா நீ?

................
விமானத்தில் ஐம்பது கிலோ சுமைக்குதான் அனுமதியாம்..
ஐயோ
பாவம் அது எப்படி என்னுள் உள்ள உன் காதலின்
கணக்கிலடங்கா
கனத்தைத் தாங்கிப் பறக்கும்?
எனக்கு
பயமில்லை.. அண்ட வெளி முழுதும் நிரம்பியுள்ள
(நம்
) காதல் அதைத் தாங்கிப் பிடிக்கும்..


அப்புறம் என்ன அவ்ளோதான்.. இன்னும் சில மேட்டர்கள்.... என்னோட அந்த டைரி நானே எடுத்து சில வருஷங்கள் ஆச்சு, அதனால மறந்து போச்சு.. இருந்தாலும் மொக்கையை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். அப்புறம் தம்பிகாள், அண்ணன் கீழ இருக்கற கவிதைகள நிஜத்துல செய்யுற அளவுக்கு வொர்த் கிடையாது. அதால செல்லம் யாரு அப்படின்னு கேக்கப்படாது (கவிதைக்கு பொய் அழகு :-)). மேற்படி இருக்கிற போட்டோ ஒரு சப்போர்ட்டுக்காக நான் போட்டது அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி...

Thursday, May 20, 2010

மீண்டும் வருவேன்

பின்னூட்டம் போட்டும் கூகுள்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் பாராட்டி (என்னைய வச்சு காமெடி பண்ணியதற்கும்னு சொல்லனுமோ??) என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன். அப்புறம் என்ன, ஏதோ நாம் அறிமுகத்தையே ஒரு பதிவா கொடுத்தாச்சு அடுத்த பதிவாக "என்ன எழுதுவது" அப்படின்னு தீவிரமா யோசிக்காம லைட்டா யோசிச்சப்ப ஒரு யோசனை வந்து எழுதவும் ஆரம்பிச்சாச்சு, அப்புறம் அதுக்கு சில எதிர்ப்புகள் வந்ததால அந்த எண்ணத்தை கொஞ்சம் தற்காலிகமாக ஒத்தி வைத்து அத டிராப்ட்ல போட்டுட்டேன். ஆனா அதுவும் ஒரு வகையில நல்லதா போச்சு ஏன்னா அத அதுக்கப்புறமா ஒரு தடவைக்கு பல தடவ படிச்சு பார்த்தேன் ஏதோ ஒன்னு குறையுது. கண்டிப்பா அது விரைவில் வரும்.. சரி நம்மளும் ஏரியாவுல ரௌடின்னு ஃபார்ம் ஆயிட்டோமே, இந்த தொழில்ல மூலதனமே மக்களுக்கு நம்ம மேல இருக்கற பயம்தானே.. அது போயிடுச்சுன்னா நம்ம மேல ஒரு மரியாதை (இப்ப மட்டும் இருக்குதாக்கும்) இருக்காதே. அதுக்கு என்ன பண்ணனும் அப்பப்ப மக்களை அட்டாக் பண்ணனும், அர்னால்ட் பட ரவுடி அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ அர்ஜுன் பட ரவுடி அளவுக்கோ இல்ல அட்லீஸ்ட் சுறாவுல ஒரு ராக்கெட் யூஸ் பண்ணி இளைய தளபதி இந்திய நேவியோட புகழ உலகளவுக்கு எடுத்திட்டு போயிருப்பாரே இப்படி அந்த அளவுக்காவது அட்டாக் இருக்கனும்னு ஒரு ஆசை... ஒரு விருப்பம். என்னது இளைய தளபதி எப்போ வந்தாரா? நாசமா போச்சு.. உங்களால கண்டு பிடிச்சுருக்க முடியாது ஏன்னா வேஷமும் உலகத்தரம்.. இனிமே இந்த மாதிரி வேஷம் போடுறப்ப "இப்போ ராக்கெட் விட்டவர் உங்கள் விஜய்" அப்படின்னு போட சொல்லனும்.. (சுறா ஹாங் ஓவர்லேந்து நீ எப்போடா வெளிய வருவ?? மேட்டருக்கு வாடா..)

"என்ன எழுதுவதுன்னு" பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்த போது வந்த ஐடியா தான் இந்த பதிவு.. இதைப் படிக்கப் போற என் தம்பி, கசின் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோளோடு இதைத் தொடங்குகிறேன்.. அது என்னவென்றால் இனி வரப் போகும் ஒவ்வொரு வரிகளும் என்னுடைய சொந்த வரிகள் தான் என்றாலும் எந்த காரணம் கொண்டும் இது வசந்தாவிற்கு தெரியக்கூடாது.. அப்புறம் நான் அமெரிக்காவிலிருந்து ஆலம்பாடிக்கு திரும்ப செல்வது கஷ்டம். அதால கொஞ்சம் கருணை காட்டுங்கள்.. காட்டினீங்கன்னா அண்ணன் வரும்போது ஆப்பிள் ஐபாட் வாங்கிட்டு வருவேன்.. இந்த இடத்தில் வசந்தாவிற்கு ஒரு சின்ன அறிமுகம்.. என்னுடைய அம்மா.. மாமியாராகப் போகும் வயது.. (வெயிட் வெயிட் எங்க அண்ணனுக்கு கல்யாண வயசு ஆகுதுன்னு சொல்ல வந்தேன்.. இதற்கு பின்னால் என் ரூட்ட கிளியர் செய்யும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை என்பதையும்.. அவ்வாறு யாராவது தவறாக நினைத்தால் அவர்களுக்கு பால்ய விவாகம் தவறு என்று அம்பேத்கார் அறிவித்து உள்ள சட்டத்தை நினைவுப்படுத்தவும் கடமைப்பட்டுள்ளேன்.).. இருந்தாலும் மாமியாரோடு இன்றும் சிற்சில சண்டைகள் போட்டு, உங்கள் அபிமானத் திரையரங்குகளில் வெற்றி (வெட்டி??) நடைபோடுகிறது என வரும் விளம்பரப் படங்களுக்கு இடையில் கொஞ்சம் சீரியல் பார்த்து, சமைத்து, துணி துவைத்து, என் அப்பாவை எப்போதும் குறை சொல்லி எங்களைப் பற்றி எப்போதும் நிறைகளை மட்டும் சொல்லி வந்த, நம்மால் இல்லத்தரசிகள் என்று அடைமொழி கொடுக்கப்பட்டு, தாங்கள் அன்பென்னும் பெயரால் அடிமைகளானதுத் தெரியாமல் இருக்கும் சில கோடி பெண்களில் ஒருவர் (இப்படியெல்லாம் எழுதி மகளிரணிட்ட ஸ்கோர் பண்ணலாம்னு பாக்குறியா?? அதெல்லாம் நடக்காது தண்ணிய குடி தண்ணிய குடி). என்னதான் மாமியாரையும் கணவரையும் குறை சொன்னாலும் பிள்ளைகளை குறை சொல்லாத டிபிகல் அம்மாவிலிருந்து கொஞ்சம் வேறுபட்டவர். என்ன ஆச்சுன்னு கேக்கறீங்களா? ஒரு நாள் நானும் எங்க அண்ணனும் திவ்யாவா மகாலட்சுமியா யாரு நல்லா ப்ரோக்ராம் பண்றாங்கன்னு(!!!) விவாதம் ஆரம்பித்து வாக்கு வாதம் வரைச் சென்றபோது (நல்ல அண்ணன் தம்பிங்க..) திடீர்னா சீரியல நிறுத்துவானுங்க.. பேசினத எல்லாம் கேட்டுபுட்டாங்க.. அப்புறம் என்ன உலகிலேயே ரொம்ப நல்ல ஆண்கள், அதாவது லவ் பண்ணாத, பேரண்ட்சை ரொம்ப மதிக்கிற, சீரியல் பார்க்கும் போது சேனல மாத்தாத, அப்புறம் சாம்பார் கெட்டுப்போகும்போது அது எத்தன தடவதான் கெட்டு போகும் அதான் நீ வச்சப்பவே ஒரு தடவ கெட்டு போச்சேன்னு என்னை மாதிரி கமெண்ட் பண்ணாத, முக்கியமா இந்த பாட்டி ஏம்மா சொல்றத கேக்க மாட்டேங்குது (பின்ன 2 ஸ்பீக்கரும் அவுட்டு ஆனா எப்படி கேக்கும்)அப்படின்னு ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டியாவது சொல்றவங்கதான்..

இது பத்தாதுன்னு ஒரு நாள்,

"ரசம் எப்படிடா இருக்கு??"
"சூப்பர்மா நீ வைச்சதாச்சே.."
"இல்ல விஜய் ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்டா.."
நான் என்ன சொல்லிருக்கனும்??
"அதுல்லாம் ஒன்னும் இல்லம்மா உனக்கு ரீசன்ட்டா சளி பிடிச்சுதுள்ள அதான் டேஸ்டு தெரியல.. முதல்ல டாக்டர போய் பார்க்கணும்"
இப்படி சொல்லிருக்கனும், நம்ம வாயில வாஸ்த்து அன்னைக்குன்னு பாத்து சரியில்ல போல அதால
"அது ஒன்னும் இல்லம்மா டேஸ்ட்டுதான் மிஸ்ஸிங்.." அப்படின்னு சொல்லிபுட்டேன்.. அதுல இருந்து சாப்பாடு கிடைக்கறதே கஷ்டமா இருக்கு..


மொத்தத்தில் தங்களது அண்ணன் தம்பிகள்தான் (என்னுடைய மாம்சுகள்) உலகில் நல்ல ஆண்கள் எனும் எண்ணம் இன்னும் ஸ்ட்ராங் ஆயிடுச்சு.. அதனால தம்பிகளா இந்த பதிவையும் பத்தி சொன்னீங்கன்னா நான் அவ்ளோதான்.. க்ரைம் ரேட் ஏற்கனவே ஜாஸ்தியா இருக்கு..

சரி அப்படி என்னாத்த எழுத போறன்னு கேக்கறீங்களா? கவிதை. ஓகே.. அதுக்கு??
ஒரு சில கவிதைகள் நம்ம ரொமான்டிக்கான மூட்ல இருந்தப்ப எழுதிருக்கலாம் அதெல்லாம் படிச்சுட்டு நம்மள பாத்து "அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா" அப்படிங்கறத கூட "அம்மா இங்கே வா வா ஆப்பம் சுட்டு தா தான்னு பாடுன பையன் இப்ப யாரையோ பத்தி உயிரே அப்படி இப்படி எல்லாம் எழுதுறானேன்னு பீலிங்க்ஸ் ஆயிட்டாங்கன்னா?? அப்புறம் என்னால தாங்க முடியாது (எப்படியெல்லாம் யோசிச்சு பிட்டு போட வேண்டியிருக்கு??)


அதோட இன்னொரு விஷயத்தை தெளிவுப்படுத்தனும்.. இது அனைத்தும் நான் காலேஜில் படித்த(??) போது எழுதியவை (நம்பணும் இதுக்காக டைரிய எல்லாம் காட்ட முடியாது) .. ஒரு சில கவிதைகள் (கிறுக்கல்கள்) என்னோடு ஹச்சிஎல் லில் சேர்ந்த நண்பர்களுக்கு நினைவிருக்க வாய்ப்பு இருக்கிறது.. ஏன்னா சிலத நான் ஒரு அறிமுக விழாவில் வாசித்தேன்.. கல்லூரியை விட்டு வந்த பிறகு சில சொந்த காரணங்களுக்காக இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன் (அப்பாடா தப்பிச்சோம்). "நெசமாத்தான் சொல்றியா??" நீதான் எழுதினியா அப்படின்னு கற்றது தமிழ் ஆனந்தி மாதிரி யாரும் கேட்கக்கூடாது என்னா?? கொஞ்சம் மொக்கை கவிதைகளாகத்தான் இருக்கும் பொறுத்தருள்க..
இந்த பதிவை டைப் செய்யும் போதே ப்ளாகர் மக்கர் பண்ணுவதால், பதிவின் நீளம் கருதி மற்றவை அடுத்த ப்ளாகில் விரைவில்..

Sunday, May 16, 2010

என்ன எழுதுவது??

கடந்த சில நாட்களாவே ஒரு விதமானப் பதற்றம், ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகுதுன்னு உள் மனசு சொல்லிட்டே இருந்துச்சு, அது இன்னைக்கு நடந்துடுச்சு. நானும் ஒன் ஃபைன் நைட்டு ரூம்ல லைட்டு போட்டு யோசிச்சேங்க, 10 மணியிலேர்ந்து 12 மணி வரைக்கும் எதுக்கு எழுதனும்னு யோசிச்சேன், 12 மணியிலேர்ந்து 2 மணி வரைக்கும் எழுதுனா என்ன தப்புன்னு யோசிச்சேன், 2 மணிக்கு அப்புறம் எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா என்ன எழுதறதுன்னுதான் முடிவு பண்ணல அல்லது பண்ண தெரியல. அதனால்தான் ப்ளாகோட பேரு "என்ன எழுதுவது" னு வச்சுட்டேன் (அப்பாடி ப்ளாகோட பெயர்க்காரணத்தை சொல்லியாச்சு!). அப்புறம் இந்த ஞானம், நமக்கு அது பேருல மட்டும்தாங்க இருக்கு. எனக்கு இந்த நாமத்தை சூட்டிய என்னோட அத்தைக்கிட்ட பெயர்க்காரணத்தைக் கேட்டேன், இந்த குழந்தை எதிர்காலத்தில் ஒரு பூட்ட கேசாகத்தான் (உபயம்: வசூல்ராஜா) வரும் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிவதால் (என்ன ஒரு கணிப்பு பாருங்க? நம்ம முக ராசி அப்படி!) பெயரில் மட்டுமாவது ஞானம் இருக்கட்டும்னு வச்சாங்களாம்.

ஆனா அத எங்க தாத்தா சொர்கத்துல இருந்து பார்த்துட்டு ரொம்ப ஃபீல் பண்ணி பாட்டியோட கனவுல வந்து ஒரே அழுகாட்சியாம். பேரன இப்படி எல்லாரும் அவமானப் படுத்திட்டாங்களேன்னு ஃபீலிங்க்ஸ் ஆயிருப்பாங்கன்னு அவசரப்பட்டு நீங்க தப்பா நினைச்சுடாதீங்க. ஏன்னா அவங்க ஃ பீல் பண்ணது இப்படி ஒரு புள்ளைக்கு நம்ம பேரு வர மாதிரி வைச்சுப்புட்டாங்களே அப்படின்னு. அதனால எங்க பாட்டி உடனே புள்ள புரட்சிக்கலைஞர் கலர்ல செக்கச்செவேல்னு இருந்ததால இன்று முதல் அனைவராலும் விஜய் என்று (ம்) அன்போடு அழைக்கப்படுவார்னு அறிவிச்சு தாத்தாவோட ஆன்மாவ சொர்க்கம் வரைக்கும் சாந்திப் படுத்தினாங்க. ஆனா நான்தான் கடந்த இரண்டு ஆண்டுகளா இந்த பெயரைச் சுமக்க சிரமப்படுகிறேன் (சமீபத்திய காரணம் சுறா- தி லீடர்). சரி விடுங்க என்னோட சோகம் என்னோட போகட்டும்.

எங்க ஆரம்பிச்சேன்? ஆங் ஞாபகம் வந்துடுச்சு, ஞானத்துல ஆரம்பிச்சது. இதெல்லாம் எதுக்கு நான் சொல்றன்னா, நமக்கு பெரிசா இலக்கிய ஞானமோ இல்ல அறிவியல் ஞானமோ இல்லைங்க. சுஜாதான்றவங்க இந்த பாபா படத்துல ரஜினியோட அம்மாவா வருவாங்களே அவங்களா? அப்படின்ற அளவுக்குதான் நமக்கு இலக்கியம்லாம். எனக்கு தெரிஞ்ச, தெரியப்போகிற விஷயங்கள, அது சினிமாவோ, புத்தகமோ, கிரிக்கெட்டோ, இசையோ அரசியலோ இல்லை எவர்க்ரீன் காதலோ, ஏதோ ஒன்றைப் பற்றி எழுதலாம் என்று எண்ணம். "பெரிய பெரிய யானைங்க வாழுற இந்த காட்டுலதான் சின்ன சின்ன எறும்புகளும் வாழுது" (நன்றி: ஜெயமோகன்). அத மாதிரி நாமளும் ஒரு ஓரமா நிப்போம்னு ஒரு நப்பாசை.

எந்த பெரிய விஷயத்துக்கும் ஆரம்பம்னு ஒன்னு சின்னதா இருக்கும்ல? சரி.. சரி.. நான் எழுதறத பெரிய விஷயம்னு சொல்ல வரல. ஆனா இது ஒரு சின்ன ஆரம்பமா இருக்கட்டும். மற்றபடி வலைப்பூ தொடங்க எனக்கு முன்னோடியாக இருந்த என் தம்பி செந்திலுக்கு நன்றிகள். அவரு ஒரு ப்ளாக் ஆங்கிலத்துல எழுதுறாரு. சார் பெரிய கம்ப்யூட்டர் என்ஜினியர் அதனால அவரு கொஞ்சம் இந்திய அமெரிக்க உறவு, அணு சக்தி ஒப்பந்தம் அப்படின்னு பெரிய பெரிய மேட்டரெல்லாம் எழுதுவாரு. ஆனால் நான் விரைவில் ஒரு மொக்கை மேட்டரோடு உங்களை சந்திக்கிறேன்.